வடமதுரை:ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. தேரோட்டம்: மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்படும் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் சுவாமி ஊர் பிரமுகர்களால் சன்னதியில் இருந்து அழைத்து வரப்பட்டு தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் ரத வீதிகள் வழியே வலம் வரும். தேர் வீதிகளில் காத்திருந்து பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடுவர். தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக காலை 10 முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கா வேல்முருகன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.