பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, வரும் 6ம் தேதி, ஆடி அஸ்வினியில் துவங்குகிறது. இதற்காக தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலில், இந்தாண்டிற்கான ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, வரும் 6ம் தேதி துவங்குகிறது. 7ம் தேதி, ஆடி பரணியும், 8ம் தேதி ஆடி கிருத்திகை திருவிழாவும் நடைபெறுகின்றன. மூன்று நாள் தெப்பத்தில், கோவில் பணியாளர்களின், நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது. மேலும், முதல் நாள் தெப்பத்தில், திரைப்பட பாடகி கவிதா கோபியின் கச்சேரியும்; இரண்டாம் நாள் தெப்பத்தில், சங்கர் கணேஷின் கச்சேரியும்; மூன்றாம் நாள் தெப்பத்தில், வீரமணிதாசனின் கச்சேரியும் நடைபெற உள்ளன.இதற்காக, மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில், தெப்பம் கட்டும் பணியில், கோவில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, முருகப் பெருமானை வழிபடுவர். விழாவை முன்னிட்டு, மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான குடில்களில்,மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது.