பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
பழநி: ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், மாரியம்மன்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடியை முன்னிட்டு பழநி ஊர்க்கோயில் பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 14 வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நூறாயிரம் மலர்கள் துவி, லட்சார்ச்சனை நடக்கிறது. நேற்று ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு காலை 7மணிக்கு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்குமேல் சந்தனகாப்பு அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடந்தது. பழநி மாரியம்மன் கோயிலிலும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. திருஆவினன்குடி கோயிலில் துர்க்கையம்மன், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, திருவிளக்கு பூஜை நடந்தது. புதுதாராபுரம்ரோடு ரணகாளியம்மன்கோயில், புதுநகர் ரயில்வே கேட் முத்துமாரியம்மன் கோயில், லட்சுமிபுரம் மகாலெட்சுமி கோயில், ஆதிபராசக்திகோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைநடந்தது. மாவிளக்கு எடுத்தும், நெய்தீபம் ஏற்றியும், பொங்கல், கூழ் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.