பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை, கீழ்த்தெரு, மூலஸ்தம்மன் கோவிலில், 15வது ஆண்டு ஆடி திருவிழா, நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கீழ்த்தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில், ஆடி மாதந்தோறும், மூன்றாவது வாரம் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, 15வது ஆடி திருவிழாவை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி, கசத்து மேடு பகுதியில், கரக அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, 1ம் தேதி காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சியும்; மூன்றாவது நாளான நேற்று முன்தினம், பிற்பகல் 2:00 மணி அளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும்; இரவு 9:00 மணி அளவில், மூலஸ்தம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தார். வீதியுலாவில், கரகாட்டம்; மயிலாட்டம்; பொய்க்கால்குதிரை ஆகியவை இடம் பெற்றிருந்தன.