பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
மாமல்லபுரம்: நெம்மேலியில், ஆளவந்தார் குரு பூஜை விழா நடந்தது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ், மல்லபுரத்தில், நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை இயங்கி வருகிறது. மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கடலோர பகுதியில் சவுக்கு வளர்த்து, அரசுக்கு உதவினார். இதையடுத்து, அப்போதைய அரசு, அவர் சவுக்கு வளர்த்த பகுதிகளை, அவருக்கே இலவசமாக வழங்கி கவுரவித்தது. அவர், ஆன்மிகத்தை நாடி, பல நுாறு ஏக்கர் நிலத்தை, தமிழக அரசிடம் ஒப்படைத்து, அதன் வருவாயில், கோவில் உற்சவங்கள் மற்றும் தர்ம செயலுக்கும் பயன்படுத்த உயில் பதிவு செய்தார். அரசும், அறநிலைய துறை அறக்கட்டளை ஏற்படுத்தி, சொத்துகளை பராமரித்து வருகிறது. நெம்மேலியில், அவரது நினைவிடத்தில், அவர் பிறந்த பூரட்டாதி நட்சத்திர நாளில், ஆண்டுதோறும் குரு பூஜை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா, நேற்று முன்தினம் திருவாய்மொழி சேவையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று, காலை 7:00 மணிக்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, 9:00 மணிக்கு, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் ஆகிய சுவாமிகளின் சார்பில், அவருக்கு பரிவட்ட மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 10:00 மணிக்கு, பாகவதர்கள் திருவாய்மொழி சேவையாற்றினர். செயல் அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.