பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
ஈரோடு: ஆடி பெருக்கை கொண்டாட, நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர். உலக மக்கள் நன்மை, விவசாயம், கால்நடைகள் செழிக்க ஆண்டுதோறும் ஆடி பெருக்கன்று, காவிரியை வணங்குவது, தமிழர்கள் மரபாகும்.ஆடி பெருக்கு தினத்தன்று அதிகாலையில் ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைக்கு, குடும்பத்துடன் சென்று நீராடிய பின், சப்த கன்னிமார்கள், முன்னோர் வழிபாடு, குல தெய்வ வழிபாடு நடத்துவர். அதன் பின் நீர் நிலைகள் அருகில் உள்ள சுவாமிகளை வழிபட்ட பின், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் விருந்து சாப்பிடுவது வழக்கம். அதுபோல் நேற்றும், ஈரோடு, கருங்கல்பாளையம், பரிசல் துறை, காரணம் பாளையம், நட்டாற்றீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் முன் செல்லும் காவிரி கரையில், பொதுமக்கள் குவிந்தனர். காவிரி தாயை வணங்கிய பின் முன்னோர்களுக்கு படையலிட்டு, ஆற்றில் விட்டனர். சப்த கன்னிமார்களாக நினைத்து வழிபடும் கூழாங்கற்கள், கரையோர பகுதிகளில் அதிக விலைக்கு விற்கப்பட்டன.அதுபோல் வழிபாட்டு தேவையான சூடம், ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.ஆடி பெருக்கை முன்னிட்டு, புதுமணி தம்பதியினர் ‘தாலி மாற்றும் சடங்கும்’ நீர் நிலைகளில் நடந்தது. இயற்கை, முன்னோர், குல தெய்வ வழிபாடுகள் செய்வதால், சந்ததியினரை வாழையடி வாழையாக வாழ செய்யும் என்பது ஐதீகம்.
கருங்கல்பாளையம் காவிரி கரையில் பாதுகாப்புக்காக தீயணைப்பு துறை வீரர்கள் நிறுத்தப்பட்டனர். ரப்பர் போட்டில் அவ்வப்போது வலம் வந்தனர்.* ஆடி பெருக்கை முன்னிட்டு, பவானி, சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.குலதெய்வ வழிபாடு, பரிகார பூஜைகள், முன்னோர்களை வழிபடுவது, புதுமணத் தம்பதிகள், சுமங்கலி பெண்கள் காவிரியில் நீராடி இறைவனை வழிபடுதல் போன்றவை நடந்தது. பின், சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி, ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் வழிபட்டனர்.கூடுதுறை படித்துறையில் காவிரி தாய்க்கு தேங்காய், வழைப்பழம், கனிகளை வைத்தும், கன்னிமார் சுவாமிகள் வைத்து சிறப்பு பூஜை செய்து, தங்கள் வீடுகளில் 9 நாட்களுக்கு முன் நவதானியங்களை கொண்டு வளர்த்தப்பட்ட முளைபாரியை வழிபட்டனர். வழக்கத்தைவிட, இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.