பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
திருச்சி: ஆடிப்பெருக்கு விழா நேற்று, காவிரி கரையோர பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலைலேயே வந்து புனித நீராடினர். தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடி, 18ம் பெருக்கு பண்டிகை. ஆடிப்பெருக்கு பண்டிகை காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் அதிகாலை, 4 மணி முதலே மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. திருமணமான பெண்கள், புதுமண தம்பதியர், கன்னி பெண்கள் என அனைவரும் முளைப்பாரி, மங்கல பூஜை பொருட்கள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். காவிரியில் நீராடி புத்தாடை அணிந்து முளைப்பாரி, திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். பின் படித்துறையில் வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், வெல்லம், தேங்காய், பூ, பழம் வைத்து பூஜை செய்து காவிரிக்கு கற்பூர ஆரத்தி காட்டி குடும்பத்துடன் வணங்கினர்.
காவிரி தாயை நினைத்துக் கொண்டு சுமங்கலி பெண்கள் புதிய தாலி சரட்டை மாற்றிக்கொண்டனர். திருமணமாகாத இளைஞர்களும், கன்னிப்பெண்களும் திரண்டு வந்து காவிரித்தாய்க்கு பூஜை செய்து ஆற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் மஞ்சள் நூலை சுற்றி வழிபட்டனர். பின் ஸ்ரீரங்கநாதர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.இதே போல் அய்யாளம்மன் படித்துறை, சிந்தாமணி படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட காவிரி பாயும் இடங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி பூஜை செய்தனர். படித்துறையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* ஆடிப்பெருக்கையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று மாலை 4 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தளினார். மாலை காவிரித்தாய்க்கு சீர்வரிசை சமர்ப்பித்து விட்டு, கோவில் திரும்பினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் புனித நீராடி குலதெய்வங்களுக்கு தீர்த்தக்காவடி எடுத்து, பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.கோனூர் கந்தம்பாளையம், பரமத்தி கூடச்சேரி, தளவாபாளையம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த உப்பிளிய நாய்யக்கர் பிரிவினர் கரகம் எடுத்து காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்து தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டு நேர்திக்கடன் செலுத்தி காவல் தொய்வமாக கருப்பணார், அங்கலாளபரமேஸ்வரி தெய்வத்தினை வழிபட்டனர். இதனால் காவிரி ஆற்றில் அதிகாலை முதல் இரவு வரை விழாக்கோலமாக காணப்பட்டது.
* குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர் சுற்றுப்பகுதியான கிருஷ்ணாபுரம், திருக்காம்புலியூர், சேங்கல், புலியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டஇருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.நேற்று மாலை வரை காவிரியில் எந்த அசம்பாவிதம் நடக்காமல் கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜோசி நிர்மால் குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.