பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
ஆடி கிருத்திகையில், திருத்தணிக்கும், ஆடி அமாவாசைக்கு மேல்மலையனூருக்கும், சிறப்பு பஸ்கள் இயக்க, விழுப்புரம் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.வரும், 8ம் தேதி, ஆடி கிருத்திகை தினம். அன்று, திருத்தணி முருகன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் செல்வர். எனவே, சென்னை உட்பட, வட மாவட்டங்களில் இருந்து, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வரும், 14ம் தேதி, ஆடி அமாவாசை தினம். அன்று, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் விழா நடக்கும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து செல்வர். அவர்களின் வசதிக்காக, சென்னை, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளில், விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.இதுகுறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மேல்மலையனூருக்கு, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மட்டும், 300 பஸ்கள் இயக்கப்படும். ஆடி கிருத்திகை தினத்தில், திருத்தணிக்கு, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -