முத்தாலம்மன் கோயில் திருவிழா: கழுமரம் ஏறிய இளைஞர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2015 11:08
வடமதுரை: வடமதுரை அருகே புத்தூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புத்தூர் முடிமலை ஆண்டவர் கரகம் கும்பிடுதல், முத்தாலம்மன் கோயில் உற்சவ திருவிழா நடந்தது. கடந்த ஜூலை 28ல் அம்மன் பிடிமண் எடுத்து சாமி சாட்டுதல் நடந்தது. கடந்த 11ம் தேதி அம்மன் கண்திறப்பும், தொடர்ந்து வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளுடன் கோயில் வீடு குடிபுகும் நிகழ்ச்சியும் நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் என நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. நேற்று முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அங்கு நடப்பட்டிருந்த 45 அடி உயர கழுமரத்தில் பிச்சம்பட்டி மூக்காராமனும், 35 அடி உயர மரத்தில் அரண்மனைப்பட்டி பெருமாளும் ஏறினர். மர உச்சியில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை, விபூதி, பழங்களை எடுத்து வந்து பக்தர்களுக்கு வழங்கினர். நிறைவாக கொன்னையம்பட்டி பூஞ்சோலைக்கு அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.