பதிவு செய்த நாள்
22
ஆக
2015
11:08
திருப்பூர்: ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், திருப்பூரில் நேற்று நடந்த கோலாகலமான விழாவில், 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபா, 90வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், 90 ஜோடிகளுக்கான இலவச திருமண விழா, வாலிபாளையம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், சாயி பஜனுடன் விழா துவங்கியது. சிவன், பார்வதி, புட்டபர்த்தி சாயிபாபா படத்துக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை செய்விக்கப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, வேத விற்பன்னர்கள், மந்திரம் ஓதினர்.
காப்பு கட்டுதல், மாலை அணிவித்தலை தொடர்ந்து, நாதஸ்வரம், மேளம் முழங்க, 10:15 மணிக்கு, மங்கல நாண் பூட்டும் நிகழ்வு நடந்தது. ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் அகில இந்திய துணை தலைவர் ரமணி, மாநில தலைவர் வரதன், துணை தலைவர் சுரேஷ், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் உட்பட சத்ய சாயி நிறுவன நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளானோர், மணமக்களை வாழ்த்தினர். மணமகள்களுக்கு மெட்டி, மணமகன்களுக்கு கைக்கடிகாரம், திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் பிரசாதத்துடன், வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய, 27 வகையான சீர்வரிசையும் வழங்கப்பட்டன.மூன்று மாதம் முதல், பேறுகாலம் வரை, இலவச சிகிச்சை பெறும் வகையில், மணமகள்களுக்கு மருத்துவ அட்டை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு, மங்கல பொருட்களுடன் கூடிய தாம்பூல பையும், மரக்கன்று வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.