பதிவு செய்த நாள்
24
ஆக
2015
12:08
திருச்சி: திருச்சி சர்க்கார் பாளையம் காசி விஸ்வநாதர் கோவிலில், இன்று (24ம் தேதி) துவங்கி, மூன்று நாட்களுக்கு சூரிய வழிபாடு நடக்கிறது. திருச்சி கல்லணை ரோடு, காவிரி தென்கரை சர்க்கார்பாளையத்தில் கரிகால்சோழனால் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும், மூன்று நாட்கள் காலை பொழுதில், சூரியனின் கதிர்கள் நேடியாக விழுகிறது. இந்த நிகழ்வை, சூரிய வழிபாடு என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் படும் நேரத்தில், அந்த சிவலிங்கத்தை வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம், 7, 8, 9 ஆகிய தேதிகளில் காலை, 6 மணி முதல், 6.30 மணி சூரிய உதயத்தில் துவங்கி, சூரிய ஒளி கோவிலில் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல் ஜொலிக்கும். இதை சூரியனே வந்து பூஜை செய்து வழிபடுவதாக ஐதீகம். இப்படி தொடர்ந்து நடக்கும் சூரிய வழிபாடு இன்று, 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடக்கிறது. பக்தர்கள் இந்த சூரிய வழிபாட்டில் கலந்து கொள்ள தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் புனிதா, அர்ச்சகர் சிவா என்கிற சாமிநாத குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.