பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
சேலம்: கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு, சேலம், சின்னக்கடைவீதி, ராஜாஜி காதி பவன் விற்பனை நிலையத்தில், விதவிதமான கிருஷ்ணர் சிலைகள், விற்பனைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும், வரும், செப்டம்பர், 5ம் தேதி, கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. அதையடுத்து, கிருஷ்ணன் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. சேலம், ராஜாஜி காதி பவன் விற்பனை நிலையத்தில், மஹாராஷ்டிரா, கோல்கத்தா, புதுச்சேரி, மதுரை, வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து, கலைநயத்துடன் களிமண் மற்றும் பேப்பர் கூழால் செய்யப்பட்ட விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதில், தவழும் கிருஷ்ணர், பசு கிருஷ்ணர், புல்லாங்குழல் கிருஷ்ணர், கோபியர் கிருஷ்ணர், ராதா கிருஷ்ணர், வெண்ணெய் கிருஷ்ணர், ஜலக்கிரிடை கிருஷ்ணர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர், விட்டோபா கிருஷ்ணர், என, அரை அடி உயரம் முதல், மூன்றரை அடி உயரம் வரையிலான ஏராளமான வடிவங்களில், கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இவை, குறைந்தபட்சம், 40 முதல், 2,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அழகான கிருஷ்ணர் பொம்மைகளை, வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.