பதிவு செய்த நாள்
26
ஆக
2015
10:08
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலை புனிதப்படுத்துவதற்கான பவித்ர உற்ஸவ விழா நடந்தது. இக்கோயிலில் கடந்த காலங்களில் ஆகம விதிகளை பின்பற்றாமல் சென்ற பக்தர்களாலும், பெண்களாலும் ஏற்பட்ட காரீய களங்கங்களை களையவும், கோயிலையும், தெய்வத்தையும் புனிதப்படுத்த இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில் துளசி மாடத்தில் இருந்து புனிதமண் எடுக்கப்பட்டு கோயில் மண்டபத்தில் யாகபூஜைகள் அமைக்கப்பட்டது. காப்புக்கட்டு வைபவத்துடன் விழா துவங்கியது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபால், செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் பாஸ்கரன், ராஜகோபால், நாகசுப்பு, சந்தானம் ஆகியோருக்கும், பட்டாச்சார்யார்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து யாகபூஜைகள் துவங்கின. கடந்த ஆண்டில் 360 நாட்களையும் புனிதப்படுத்துவதற்காக 360 வகையான மந்திரங்களும், பூஜைகளும் செய்யப்பட்டன. 2ம் நாளும் யாகபூஜைகள் நடந்தது. 3ம் நாள் காலை சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலையில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார். மீண்டும் திரும்பிய சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். இறுதியில் காப்பு கழற்றல், சாந்திபூஜை நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நரசிம்ம பட்டர் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர்.