பதிவு செய்த நாள்
26
ஆக
2015
11:08
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான, பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நேற்று நடந்தது. சிவபெருமானின் திருவிளையாடல்களில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி, அனைத்து உயிர்களிலும் இறைவன் வாழ்கிறான் என்பதை உணர்த்துவதாக குறிப்பிடப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த பெரிய குளம் உடைந்தபோது, கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என, மன்னர் உத்தரவிடுகிறார். அங்கு, பிட்டு விற்கும் தொழில் செய்து வரும் மூதாட்டி, குளக்கரையை அடைக்க ஆள் இல்லாமல், வேதனை அடைந்து இறைவனை வேண்டுகிறார். வேலையாளாக உருவம் எடுத்து, அங்கு வரும் சிவபெருமான், பிட்டு கூலியாக உண்டு விட்டு, குளக்கரைக்கு செல்கிறார்; ஆனால், கரையை அடைக்காமல், துõங்கி ஓய்வு எடுக்கிறார். அங்கு வந்த மன்னர் ஆத்திரமடைந்து, கையிலிருந்த பிரம்பால் அடிக்கிறார்; மக்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் பிரம்பு அடி விழுகிறது. இத்திருவிழா, ஆவணி மாதம் நடந்ததாகவும், இதை பிட்டு திருவிழாவாக, சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், வாணிய சமுதாயம் சார்பில், 63வது ஆண்டாக நேற்று நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து விசாலாட்சி அம்மனுடன் விஸ்வேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் குளத்தின் முன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை விளக்கும் வகையில், ஒருவர் கூலியாளாகவும், ஓய்வு எடுப்பது போலவும், மன்னர் பிரம்பால் அடிக்கும் காட்சி, குளக்கரை அடைப்பது என, திருக்காட்சியை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.