பதிவு செய்த நாள்
01
செப்
2015
12:09
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, கோனூரில் விநாயகர் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, மதுரைவீரன், ராக்கியண்ணன், ராக்காயி, ராசாத்தி கவுண்டர், கவுண்டச்சி அம்மன் குதிரைவாகனம் மற்றும் பொன் காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், விமான ராஜகோபுரம் ஆகிய திருப்பணிகள், மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவு பெற்றதை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 28ம் தேதி அதிகாலை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், மகா கணபதி யாகம், பூர்ணாகுதி, தீபாராதனையும், காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்து வரச்செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது. ஆகஸ்ட், 29ம் தேதி காலை, பஞ்சகவ்யம், சுதர்சன மற்றும் தன்வந்திரி ஹோமம், மாலை, வாஸ்து பூஜை, அங்கரார்பணம், கும்பலங்காரம், முதல் கால பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம், விசேஷசாந்தி, விநாயகர் வழிபாடு, இரண்டாம் காலம், கோபுர கலசம் வைத்தல், மூன்றாம் காலம் பூஜை நடந்தது.
நேற்று காலை, 6 மணிக்கு, புண்யாகம், யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, நான்காம் கால பூஜையும், காலை, 9.30 மணிக்கு, கடம் புறப்பாடு, காலை, 10 மணிக்கு, விமான கோபுரம், விநாயகர், பொன் காளியம்மன் பரிவார சக்தி மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட், 29 முதல், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள், குடிபாட்டு மக்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.