பதிவு செய்த நாள்
05
செப்
2015
10:09
திருத்தணி: முருகன் கோவிலில் 4.9.15 ல் நடந்த ஆவணி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் 4.9.15 ல் , ஆவணி மாத கிருத்திகை விழா நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கீரிடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.
இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருத்திகை விழாவில் கலந்துகொள்ள, 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்து, பொது வழியில், நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிப்பட்டனர். சில பக்தர்கள் மலர், பால் மற்றும் மயில் காவடிகள் எடுத்து வந்து மொட்டை அடித்து, சரவண பொய்கையில் நீராடி மூலவரை வழிப்பட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.