பதிவு செய்த நாள்
21
ஜூலை
2011
11:07
சபரிமலை : ஆடி மாத பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று இரவு அடைக்கப்படும். நிறப்புத்தரி உற்சவத்திற்காக நடை ஆகஸ்ட் 4ம் தேதி மாலை திறக்கப்பட்டு, அதற்கடுத்தநாள் உற்சவம் முடிந்து அன்றிரவே நடை அடைக்கப்படும். கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஒவ்வொரு தமிழ், மலையாள மாதப்பிறப்பன்று நடை திறக்கப்பட்டு, மாத மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஆடி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல் சாந்தி சசி நம்பூதிரி நடை திறந்தார். மறுநாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. மேலும், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களான படி, உதயாஸ்தமனம், புஷ்பாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடந்தது. சபரிமலை பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நடை திறந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவுற்று, இன்றிரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4ம் தேதி நிறபுத்தரி உற்சவத்திற்காக நடை திறக்கப்படும். மறுநாள் (5ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்த, புத்தம் புதிய நெற்கதிர்களை கொண்டு சுவாமிக்கு படைப்பர். இந்நிகழ்ச்சி காலை 6.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து வழக்கம்போல் பூஜைகள் செய்விக்கப்படும். உற்சவம் முடிந்து, அன்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.