பதிவு செய்த நாள்
21
ஜூலை
2011
11:07
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. கப்பல் விடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இலங்கையில் இருந்து அதிக பக்தர்கள் வருவார்கள் என்று ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் தெரிவித்தார். உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு பனிமயமாதா ஆலய திருவிழா நடப்பதை ஒட்டி நேற்று பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை வில்லியம் சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது; பனிமயமாதா ஆலய திருவிழாவரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இதற்கு முன்பாக 25 தேதி மாலை 6 மணிக்கு கொடிப்பவனி நடக்கிறது. 26ம் தேதி காலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி, 7.30 மணிக்கு கூட்டு திருப்பலியுடன் கொடியேற்றப்படுகிறது. ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்து கொள்கிறார். மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல், மாலையில் இளையோருக்கான திருப்பலி அதனை தொடர்ந்து ஜெபமாலை நற்கருணை ஆசீர் நடக்கிறது. 27ம் தேதி முதியோருக்கான திருப்பலி, 28ம் தேதி நகர செயக்குழுக்களுக்கான சிறப்பு திருப்பலி, 29ம் தேதி ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வுக்கான சிறப்புத் திருப்பலி, 30ம் தேதி நகர பொது நிலையினருக்கான சிறப்பு திருப்பலி, 31ம் தேதி நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி நற்செய்தி பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி, 2ம் தேதி நகர துறவறத்தாருக்கான சிறப்புத் திருப்பலி, 3ம் தேதி ஏழுகடல்துறை மக்களுக்கான திருப்பலி, 4ம் தேதி நகர வின்சென்தியர்களுக்கான திருப்பலி ஆகியவை நடக்கிறது. விழாவின் முக்கிய திருவிழாவான அன்னையின் பெருவிழா 5ம் தேதி நடக்கிறது. காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.15 மணிக்கு இரண்டாம் திருப்பலி, 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி, மதியம் 12 மணிக்கு சிறப்பு பெருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. இந்த திருப்பலிகளில் ஆயர் இவோன் அம்புரோஸ், திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணிடிவோட்டா, மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இரவு 7 மணிக்கு அன்னையின் திருவுருவப்பவனி நகரின் முக்கிய வீதிகளில் நடக்கிறது.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடப்பதால் இந்த ஆண்டு இலங்கையில் இருந்து அதிகமான பக்தர்கள் வருவார்கள். திருவிழா நாட்களில் தினமும் காலை ஜெபமாலை, முதல்திருப்பலி, இரண்டாம் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஜாதி மதத்திற்கு அப்பாற்றப்பட்டு அனைவரும் விழாவில் பங்கேற்க வேண்டும். திருப்பணி இல்லம் இருப்பதால் பக்தர்கள் இங்கு வந்து தங்கலாம். இவ்வாறு பங்குதந்தை வில்லியம் சந்தானம் தெரிவித்தார். உபர்ட்டஸ், இன்பென்ட் ஆகியோர் உடனிருந்தனர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தின் 400வது ஆண்டு விழா 2013ம் ஆண்டு வர உள்ளது. அந்த ஆண்டுவிழாவை ஒட்டி தங்கதேர் ஓட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். 2007ல் தங்கதேர் ஓடியது. அதன் பிறகு தங்கதேர் எப்போது ஓடும் என்று பக்தர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். இதனால் 2013ல் தங்கதேர் ஓடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆக.,5ல் மாவட்டதிற்கு உள்ளூர் விடுமுறை : தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதனை ஒட்டி மாவட்டம் முழுவதும் அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. செலவாணி முறிவு சட்டத்தின்படி இது பொது விடுமுறை நாள் இல்லை. இந்த விடுமுறைக்கு பதிலாக 13.8.2011 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.