பதிவு செய்த நாள்
14
செப்
2015
10:09
செஞ்சி: மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்தனர். இரவு 11:00 மணிக்கு, அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்களும், கோவில் பூசாரிகளும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 12:15 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, இணை ஆணையர் வாசுதேவன், உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள் உற்சவ ஏற்பாடுகளை செய்தனர். டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, புதுச்சேரி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.