பதிவு செய்த நாள்
21
ஜூலை
2011
12:07
செஞ்சி : சிங்கவரம், மேல்சேவூர் கோவில்களில் மூடப்பட்டுள்ள பாதாள அறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து செஞ்சி பகுதி பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி துவங்குவதற்கு முன்பாக தென்னிந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக செஞ்சிக் கோட்டை இருந்தது.பிரம்மாண்டமான கோட்டை, அரண்மனை மட்டும் இன்றி கோட்டை வளாகத்திலும், செஞ்சியை சுற்றியும் ஏராளமான கோவில்கள் இருந்தன. கோட்டைக்குள் இருந்த திருவேங்கடமுடையான் (வெங்கட்ரமணர்), வேணுகோபால சுவாமி, ரங்கநாதர், கோட்டைக்கு வெளியில் இருந்த பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர், தேவனூர் சிவன் கோவில் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் படை யெடுப்பில் அழிந்தன. செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் சிங்கவரம் ரங்கநாதர், மேல்சேவூர் ரிஷிபபுரிஈஸ்வரர் கோவில் உட்பட சில கோவில்களே தப்பின.செஞ்சி மன்னர்களின் இஷ்ட தெய்மான சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு, ராஜா தேசிங்கு சுரங்க வழியில் வந்து, சென்றதாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.இதை உறுதி செய்வதை போல் ரங்கநாதர் கோவிலில் தாயார் சன்னதிக்கு பின்புறம் ஒரு சுரங்கம் இருந்தது. இது பாதாள அறையா, சுரங்கமா என்பதே இதுவரை தெரியவில்லை. மலை மீதுள்ள இந்த கோவிலில், யாரும் செல்லாத இந்த வழியை சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்த போது சுவர் எழுப்பி மூடினர்.இதே போல் மேல்சேவூர் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கி.பி., 928ல் சோழ மன்னர்கள் கட்டிய ரிஷிபபுரிஈஸ்வரர் கோவில் உள் ளது. இந்த கோவிலின் கருவறையின் வடக்கில் பாதாள அறை ஒன்று உள்ளது. இந்த பாதாள அறையை கருங்கற்களை கொண்டு பிற்காலத்தில் மூடியுள்ளனர். இந்த பாதாளை அறையையும் இதுவரையில் யாரும் ஆய்வு செய்யவில்லை. திருவனந்தபுரம் பத்மாநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் ஏராளமான பொங்கிஷங்கள் இருந்தது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மன்னர்கள் கட்டி, வணங்கிய சிங்கவரம், மேல்சேவூர் கோவில்களின் பாதாள அறையிலும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக செஞ்சி பகுதி மக்கள் கருதுகின்றனர். எனவே இந்த பாதாள அறைகளை இந்து சமாய அறநிலையத்துறையினரும், தமிழக தொல்லியல் துறையினரும் இணைந்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இவ்வாறு செஞ்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.