பதிவு செய்த நாள்
14
செப்
2015
11:09
சத்தியமங்கலம்: அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அம்மனுக்கு சாற்றப்பட்ட பட்டுப்புடவைகளை பக்தர்கள் போட்டி போட்டு, ஏலம் எடுத்தனர். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் பிரதானமானது. நேற்று முன்தினம் துவங்கி நேற்று மதியம் வரை அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. மதியம் உச்சிக்கால பூஜையின்போது, கோவிலை சுற்றிலும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து, பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, ஈரோடு, கோபி, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, பக்தர்கள் திரளாக நடந்து, பண்ணாரி சென்று அம்மனை வழிபட்டனர். நேற்று, பண்ணாரி மாரியம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு பணத்தால் கட்டி, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலுக்கு முன் உள்ள குண்டத்தில், பக்தர்கள் உப்பு கொட்டி வணங்கினர். கோவில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.