ஈரோடு ரயில்வே காலனிக்கு அருகே அமைந்துள்ளது மாயவர் கோயில். பாமா ருக்மணியுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் கிருஷ்ணன். கொங்கு நாட்டில் கிருஷ்ணனை மாயவர் என அழைப்பதுண்டு. கிருஷ்ணர் சன்னதிக்கு எதிரே ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. புவனேஸ்வரி அம்மனும் கன்னிமாரும் ஒரு சன்னதியில் உள்ளனர். விநாயகர், நவகிரக சன்னதிகள் தனியே உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் நடைபெறுகின்றது. புரட்டாசி நான்காவது சனிக்கிழமை, சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்கள் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் நடைபெறுகின்றன. நாற்பது வருடங்கள் பழமையான இக்கோயிலில் அருள்பாலிக்கும் மாயவரை வணங்கினால் துன்பங்கள் அனைத்தும் மாயமாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!