பதிவு செய்த நாள்
22
ஜூலை
2011
11:07
ஏரல் : ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. முக்கிய விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று காலை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் கொடியேற்றி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. காலை சேர்ம விநாயகர் திருஉலா, இரவு 8 மணிக்கு திருஆல்வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரம், 24ம் தேதி பூங்குயில் சப்ரத்தில் நடராஜர் அலங்காரம், 25ம் தேதி திருப்புன்னை சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்தில் கோயில் வலம் வருதல் நடக்கிறது. 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை இரவு 8 மணிக்கு பல்வேறு சப்பரங்களில் வெவ்வேறு கோலங்களில் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 30ம் தேதி முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி சிறப்பு அபிசேஷக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 31ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளைசாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சைசாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவின் கடைசிநாள் நிகழ்ச்சி வரும் 1ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீர்க்கும் துறையில் நீராடல், மதியம் அன்னதானம், மாலையில் ஆலிலை சயன அலங்காரம், இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்களதரிசனம் ஆகியவை நடக்கிறது. திருவிழாவில் 12 நாட்களில் ஒவ்வொரு நாள் இரவும் கோயில் கலையரங்கத்தில் நாகஸ்வரம், பொம்மலாட்டம், வில்லிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு, சிறப்புதவுல், சொற்பொழிவு, செண்டை, சிங்காரிமேளம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர்வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஸ்ரீவை.,போலீஸ் டிஎஸ்பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் செய்து வருகிறார்.