செண்பகவல்லியம்மன் உண்டியலில் கடந்தாண்டை விட கூடுதலாக 1.5 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2011 11:07
கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ராஜகோபுர திருப்பணிகள் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் கடந்தாண்டை விட இந்தாண்டு சுமார் 1.5 லட்சம் அதிகமாக பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க பணிகள் துவங்கி தற்போது மஹாகும்பாபிஷேகத்தை எதிர்நோக்கி நிறைவுப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திருப்பணிகளுக்கான செலவினங்களை எதிர்கொள்ள கோயிலில் கொடிமரம் மற்றும் அம்மன் சன்னதி, நுழைவு வாயில் என இரண்டு இடங்களில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த உண்டியல்கள் எண்ணப்படும் நிலையில் கடந்தாண்டு ஏப்.23ம் தேதி எண்ணப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டிற்கான திருப்பணி உண்டியல்கள் எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் (ஜூலை 20) நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் வீரராஜன், ஆய்வாளர் சுப்பிரமணியன், திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் ஆகியோரது முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் சுமார் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 668 ரூபாயை பக்தர்கள் திருப்பணி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இத்தொகை கடந்த எண்ணிக்கையின் போது பக்தர்கள் செலுத்தியிருந்த 2 லட்சத்து 97 ஆயிரத்து 916 என்பதைவிட ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 752 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கம் 18 கிராம் மற்றும் வெள்ளி 32 கிராமும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.