தெற்குகள்ளிகுளம் பனிமாதா ஆலயதிருவிழா 27ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2011 11:07
வள்ளியூர்:தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தில் 126வது ஆண்டு திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு வரும் 27ம் தேதி மாலை 6.30 மணிக்கு உவரி பங்குதந்தை பர்ணபாஸ் அடிகளார் கொடியை அர்ச்சித்து, தர்மகர்த்தா ஆனந்தராஜா கொடியேற்றுகிறார். திருவிழாவின் முக்கிய நாளான 8ம் திருவிழாவான ஆகஸ்ட் 3ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி, திருயாத்திரை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. 9ம் திருவிழா அன்று மதுரை மறைமாவட்ட ஆயர் பீட்டர் பர்னாந்து தலைமையில் சிறப்பு மறையுரை நடக்கிறது. இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் பவனி வரும் காட்சி நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஆனந்தராஜா, பங்குதந்தை அந்தோணிதாஸ், உதவி பங்குதந்தை அமலன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், கத்தோலிக்க கிறிஸ்து நாடார் மகமை சங்கத்தினர், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.