ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி விழா கோலாகலமாக நடந்தது. ஆன்மிக மாதமாக போற்றி புகழப்படும் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகின்றது. மேலும், ஆண்டாள் அவதரித்ததும் ஆடி மாதம் தான். இம்மாதங்களில் வரும் வெள்ளி அன்று அம்மன் திருத்தலங்களில் ஆடி வெள்ளி விழா விமரிசையுடன் கொண்டாடப்படும். பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தலமாக போற்றி புகழப்படும் திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் ஆடி வெள்ளி விழா கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு விஷேச பூஜை, சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக இரும்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் கூட்டம் சிலை அலைமோதியதால், கோவில் கோபுரத்தை தாண்டியும் பெண்கள் தங்கள் கைக்குழந்தையுடன் அம்மனை தரிசிக்க காத்திருந்தனர்.