பதிவு செய்த நாள்
23
ஜூலை
2011
12:07
கோபிசெட்டிபாளையம் : ஆடி வெள்ளியை முன்னிட்டு பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ஸ்வாமி வழிபாடு நடத்தினர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோபியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதலேயே பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு நேற்று பகலில் பால், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. காளியம்மன் கோவிலில் உள்ள குண்டத்தில், ஏராளமான பக்தர்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றியும், உப்பு, மிளகு கொட்டியும் வழிபட்டனர். நேற்று பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி வழிபாடு செய்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோபி பச்சைமலை முருகன் கோவில், பவளமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதலே பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கின. சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துக்கு பின், பெரிய மாரியம்மனுக்கு பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதுபோல், ஈரோடு கொங்கலம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், வாய்க்கால் மாரியம்மன் கோவில், கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில், வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில், கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் வாருணாம்பிகை சன்னதி, கோட்டை பத்ரகாளிம்மன் கோவில், தெப்பக்குளம் வீதி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், டீச்சர்ஸ் காலனி பூமாரியம்மன் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி விநாயகர் கோவில், நாராயணவலசு எல்லைநாயகி அம்மன் ஆகிய கோவில்களில் நேற்று மதியம் சிறப்பு பூஜை நடந்தது. பவானி கூடுதுறை வேதநாயகி அம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பெண்கள் குவிந்தனர். பவானி செல்லியாண்டியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.