தஞ்சை, வேதை அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2011 12:07
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்பட்டு அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி மாத முதல் வெள்ளி என்பதால் ஆயிரக்கணக்கான பெண்கள் கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதேபோல் கரந்தை கோடியம்மன் கோவில், பூமால் ராவுத்தன் கோவில் தெரு ராகுகால காளியம்மன், டபீர்குளம் ரோடு உக்கிரகாளியம்மன், கண்ணன் நகர் சித்தி விநாயகர் கோவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் நேற்று ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். * வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு ஏராளமான பெண்கள் நெய் விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர். ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள நாக கன்னி அம்மனுக்கு பெண்கள் புற்றுக்கு பால் ஊற்றி, அவர்கமே அர்ச்சனை செய்தனர். ஒருவருக்கு ஒருவர் நோன்பு கயிறு கட்டிக் கொண்டனர். இதுபோல் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள குரவப்புலம் அங்காளம்மன், அகஸ்தியம்பள்ளி பக்தகுல மாரியம்மன், கள்ளிமேடு பத்திரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.