பதிவு செய்த நாள்
07
அக்
2015
11:10
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாண்டிய மன்னர்களின் துறைமுக நகராக விளங்கிய அழகன்குளத்தில் விரிவான அளவில் அகழ்வாய்வு நடத்தப்படஉள்ளது என, தொல்லியல்த்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.பாண்டியர்களின் துறைமுக நகரங்களாக தாமிரபரணி ஆற்றில் கொற்கையும், வைகை ஆற்றில் அழகன்குளமும் இருந்தன. அழகன்குளம் ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ., தொலைவில் வைகை நதி வங்கக்கடல் கலக்குமிடத்தில் உள்ளது. இந்த துறைமுக நகரில் இருந்து, மேற்கு மற்றும் கிழக்கிந்திய நாடுகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பகுதி சங்க காலத்தில் மருங்கூர்ப்பட்டினம் என அழைக்கப்பட்டது. அங்கு 20 ஏக்கரில் தமிழக தொல்லியல்துறை அகழ்வாய்வு நடத்தியது.
முதல் பருவ அகழ்வாய்வு 1986 மற்றும் 1990 ல் நடந்தன. அதில் நுாற்றுக்கணக்கான ரவுலட்டட் எனப்படும் ரோமானிய பானை ஓடுகள் மற்றும் மதுக்குடுவைகளின் ஓடுகள், பாசிமணிகள், வழுவழுப்பான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அசோக பேரரசின் கருமை வாய்ந்த பானை ஓடுகள், சங்கு துண்டுகள் கிடைத்தன. சில ஓடுகளில் சங்ககால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கிரேக்க எழுத்து பொறிக்கப்பட்ட ரோமானியரின் 3 செப்பு காசுகள் கிடைத்தன.சில மாதங்களுக்கு முன் நடந்த 2ம் பருவ அகழ்வாய்வில் ரோமானிய நாட்டோடு தொடர்புடைய தடயங்கள் கிடைத்தன. 3 செப்பு காசுகள், பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஹரப்பா நாகரீகத்தில் இருந்த குறியீடாக கருதப்படும் உருவம் பொறித்த தொல்பொருட்கள் கிடைத்தன. செவ்வக வடிவ 10 செ.மீ., நீளத்தில் 4 முத்திரைகள் கிடைத்தன. இவை தற்போது ராமநாதபுரம் அரண்மனை ராமலிங்க விலாசம் அகழ் வைப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தொல்லியல்துறை ஆணையர் கார்த்திகேயன் பார்வையிட்டார். அவர் கூறுகையில், 3ம் பருவமாக அழகன்குளத்தில் விரிவான அளவில் அகழ்வாய்வு நடத்தப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்என தெரிவித்தார். துணை கண்காணிப்பாளர் வசந்தி, உதவி இயக்குனர்கள் கணேசன், சிவானந்தம், அகழ்வாய்வாளர்கள் சக்திவேல், பாஸ்கர், ரஞ்சித் உடனிருந்தனர்.