பதிவு செய்த நாள்
08
அக்
2015
11:10
திருத்தணி: நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், திருத்தணி முருகன் கோவிலில், யானை தங்குவதற்கு வசதியாக, 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்டபம் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்த வள்ளி யானை, கடந்த 2010ம் ஆண்டு, நவ., 29ம் தேதி, உடல் நலக்குறைவால் இறந்தது. 10 மாதங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 16 லட்சம் ரூபாய் செலவில், புதிய பெண் யானையை வாங்கினார். யானை மண்டபம் இல்லாததால், அந்த யானையை, திருத்தணி முருகன் கோவிலுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, கோவில் நிர்வாகம் மலைக்கோவில் வளாகத்தில் யானை தங்குவதற்கு வசதியாக இடம் தேர்வு செய்து, மண்டபம் கட்டுவதற்காக, 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து, கோவில் அ லுவலர் ஒருவர் கூறுகையில், மலைக்கோவில் உள்ள நுழைவாயில் அருகே, யானை தங்குவதற்கு மண்டபம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தற்போது இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்குள் மண்டபம் கட்டி பயன்பாட்டிற்கு விடப் படும் என்றார்.