நவராத்திரியின் எட்டாம் நாளில் அம்பிகையை சாமுண்டியாக வழிபாடு செய்ய வேண்டும். திரிசூலம் ஏந்தியவளாய் பாச, அங்குசத்துடன் அலங்காரம் செய்து மாவிலைத் தோரணம், மாக்கோலம் இட்டு தாமரை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பழ வகைகளை படைத்து வழிபட நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். மதுரை மீனாட்சி நாளை சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். மகிஷாசுரமர்த்தினியான அம்பிகை, அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டினாள். அசுரனாக இருந்தாலும், உயிர்க்கொலை செய்ததால், தேவிக்கு பாவம் உண்டானது. இதனைப் போக்க சிவபூஜை செய்து பிராயச்சித்தம் தேடிக் கொண்டாள். அசுரனைக் கொன்று கோபம் தணியாமல் இருந்த அம்பிகையை குளிர்விக்க, கோயில்களில் சாந்தாபிஷேகமும் நடக்கும். மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தவர்கள் சிவபூஜையையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இந்தக் கோலத்தில் மீனாட்சியைத் தரிசிப்பவர்களுக்கு நிறைந்த புண்ணியம் உண்டாகும்.
நைவேத்யம் : சித்ரான்னம் (பலவகை அன்னங்கள்)
பாடல் மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே!