நவராத்திரி வழிபாடு இன்று துவக்கம்; கோயில், வீடுகளில் கொலுக்காட்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2015 01:10
வத்திராயிருப்பு: பெண்கள் விரும்பி கொண்டாடும் நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி கோயில், வீடுகளில் கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு கொலுதர்பார் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்துக்களுக்கான முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழா மிக முக்கியமானது. மற்ற பண்டிகைகள் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி கொண்டாடப்பட்டாலும் நவராத்திரி விழா முழுக்க பெண்களுக்கான ஒரு பண்டிகையாக கருதப்படுகிறது. பெண்கள் இதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவர். வீட்டில் கொலு வைப்பதால் அக்குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் நீங்குவதுடன், சுபிட்சம் கிடைத்து நல்லகாரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காக கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்து பெண்கள் விரதமிருப்பார்கள்.
தாலிக்கயிறு: மாலையில் அருகில் வசிக்கும் பெண்களை வீட்டிற்கு அழைத்து கொலுவை வணங்கச் செய்து பக்தி பாடல்கள் பாடச்சொல்லி கேட்பார்கள். பின்னர் அவர்களுக்கு நிவேதன பிரசாதத்துடன் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், ஜாக்கட் துணி வழங்கி வழியனுப்பி வைப்பர். 9 நாட்கள் நடக்கும் விழாவின் இறுதிநாளில் தாங்கள் வணங்கும் துர்க்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து முதல்நாள் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை அகற்றுவார்கள். பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இந்த நவராத்திரி விழா இன்று மாலையில் துவங்குகிறது.
பொம்மைகள்: இதற்காக கடந்த சிலநாட்களாகவே பெண்கள் வீடுகளை சுத்தம் செய்து பொம்மைகளை தர்பாரில் வரிசைப்படுத்தி , இறைவனது நாடகங்களையும், லீலைகளையும் காட்சிப்படுத்தி கும்பம் வைத்து தயார்நிலையில் வைத்துள்ளனர். இன்று மாலை பூஜைகளுடன் கொலுதர்பாரை துவக்க உள்ளனர்.