பதிவு செய்த நாள்
23
அக்
2015
11:10
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக். 12 தேதி துவங்கி தொடர்ந்து நடந்தது. விழாவில் ஒவ்வொருநாளும் பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று நிறைவு விழா நடந்தது. காலை முதல் மாலை வரை பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு பல்லாக்கில் அம்மன் புறப்பாடாகி, வன்னி நோம்பு திடலில் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் அம்பு எய்து, வன்னி சூரனை வதம் செய்தார். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரெண்டு கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் தரிசித்தனர்.
* ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்., 12ல் மகா அபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் தினமும் இரவு வெள்ளி காமதேனு, சிம்ம, ரிஷப, அன்ன வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயதசமி நாளான நேற்று (அக்., 22) இரவு 7 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் மகிஷா வர்த்தினி கோலத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் மகர் நோன்பு திடலுக்கு புறப்பாடாகி அங்கு அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன் செய்தனர்.