பழநி: பழநி மலைக்கோயிலில் அக்.,23 ஒரேநாளில் 234பேர் என மொத்த மூன்று நாட்களில் 444பேர் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு மேல் தங்கரதப்புறப்பாடு நடக்கிறது. ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்தும் பக்தர்கள் தங்கரதம் இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு எத்தனைபேர் பணம் கட்டினாலும் ஒரே ஒருமுறை மட்டுமே தங்கரதம் வெளிப்பிரகாரத்தை வலம்வருவது தனிச்சிறப்பாகும். நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.,13 முதல் அக்.,22 வரை பத்துநாட்கள் தங்கரதபுறப்பாடு நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளிகாரணமாக அக்.,23ல் 234பேரும், அக்.,24ல் 130பேர், அக்.,25ல் 80பேர் என மூன்று நாட்களில் 444பேர் தங்கரதம் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர். விடுமுறை தினமான சனி, ஞாயிறுகளில் குவிந்த பக்தர்கள் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர்.பக்தர்கள் பொது தரிசனவழியில் இரண்டரை மணிநேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.