நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2015 02:10
திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று (28ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுமுழுவதும் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விழாக்களால் களைகட்டுகிறது. ஐப்பசி 22ம் தேதி நடக்க உள்ள திருக்கல்யாண திருவிழாவிற்கான கொடியேற்றம் புதன்கிழமை நடந்தது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 6.50 மணிக்கு காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் கொடியேற்று விழா துவங்கியது. கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நாள்களில் காலை 8 மணிக்கும் இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் அம்பாள் வீதி உலா நடைபெறும். ஐப்பசி 22ம் தேதி வரையிலும் தினமும் காந்திமதியம்பாள் வெவ்வேறு சப்பரம், வாகனங்களில் வீதி உலா வருவார். நவம்பர் 7ம் தேதி மதியம் 11.40 மணிக்கு மேல் 12.20 மணிக்குள் காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாள் காட்சி கொடுத்தருளல் விழா நடைபெறும். பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் ரத வீதிகளில் உலா வருதல் நடைபெறுகிறது. மறுநாள் நவம்பர் 8ம் தேதி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் காலையில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் தினமும் இசை நிகழ்ச்சிகள், பக்திசொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.