பழநி, :பழநி அருகே ஆயக்குடியில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மண்சுட்டி விளக்குகள் (கிளியாஞ்சட்டிகள்) தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆயக் குடியில் ஆண்டுமுழுவதும் சீசனுக்கு தகுந்தாற்போல பொங்கல் பானை, அக்னி சட்டிகள், கோடை காலத்தில் மண்பானை உள்ளிட்டவற்றை தயார் செய்வர். இவை சந்தையில் ரகத்திற்கு ஏற்ப 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப் படுகிறது. பழநி, ஒட்டன்சத்திரம், உடு மலை, பொள்ளாச்சி போன்ற பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். தற்போது கார்த்திகை தீபத்திரு விழாவிற்காக மண்சுட்டி விளக்குகளை (கிளியாஞ்சட்டி) தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. அதேநேரம் தொழிலுக்கு மூலப்பொருளான மண் தட்டுப்பாடு, விறகு விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விற்பனை மந்தம் காரணமாக விலையை ஏற்றமுடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். ஆயக்குடி பிச்சமுத்து கூறியதாவது: மண் பாண்டங்கள் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. பெரிய கார்த்திகை வரவுள்ளதால் தற்போது மண்சுட்டிகள் அதிகமாக தயார் செய்கிறோம். ஒருலட்சம் விளக்குகள் வரை விற்பனை ஆகும். மழைபெய்து குளங்களில் தண்ணீர் உள்ளதால் மண் கிடைப்பது அரிதாக உள்ளது. ஒரு மாட்டுவண்டி மண் விலை ரூ.700 முதல் ரூ.900வரை கேட்கின்றனர். விறகு 10கிலோ ரூ.100 விற்கிறது. இதனால் ஒருசிலர் மட்டுமே விளக்குகள் தயார் செய்கிறோம். மொத்த வியாபாரிகளிடம் 60 காசு முதல் ரூ.2 வரை விளக்குகளின் அளவிற்கு ஏற்றவாறு விற்கிறோம், என்றார்.