பதிவு செய்த நாள்
12
நவ
2015
03:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. கோயிலில் காலை 8.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாக பூஜைகளைத் தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.
சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டப்பட்டு பின்பு, விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சார்யார்கள் காப்பு கட்டினர்.
சூரசம்ஹாரம்: தினம் இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கும் சண்முகார்ச்சனை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 16ல் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், நவ. 17ல் சூரசம்ஹாரம், நவ. 18 காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மாலை 3 மணிக்கு மூலவர்முன்பு தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை தரிசனம் நடக்கும்.