பதிவு செய்த நாள்
17
நவ
2015
10:11
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் மகா சம்ப்ரோக் ஷணத்துக்கான, நான்காம் கால, யாக சாலை பூஜைகளை அடுத்து, நேற்று மாலை, மூலஸ்தான தங்க கோபுரத்துக்கு, திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக் ஷணம் நாளை, காலை, 8:45 மணி முதல், 10:00 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக, 14 முதல், யாக கால பூஜைகள் துவங்கின. நேற்று காலை, 9:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்கி, சதுஸ்த்தானார்ச்சனை, பூர்ணாஹூதி, நிவேதனம் மற்றும் சாற்றுமுறை நடைபெற்றது. மாலை, 4:30 மணிக்கு, பெரிய சன்னிதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னிதி ஸ்தாபன திருமஞ்சனம் நடந்தது. மூலவர் சன்னிதியின் தங்க விமான கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜை துவங்கியது. இன்று, காலை, 8:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை, மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீரங்க நாச்சியார் சன்னிதி திருமஞ்சனம், இரவு, 7:15 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை மற்றும் வாண வேடிக்கை நடைபெற உள்ளது. மகா சம்ப்ரோக் ஷணம் நாளை, காலை, 8:45 மணி முதல், 10:00 மணி வரை நடைபெறுகிறது.