தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. சுவாமிமலை முருகன் கோயில்,முருகனின் ஆறுபடை வீடுகளில் 4வது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவிலில் தந்தைக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்து முருகன் திகழ்கிறார்.
சிறப்பு பெற்ற இந்த கோயிலில் கடந்த 11ம் தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வருகிற 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. கந்தசஷ்டியின் முதல்நாள் விழாவான, கடந்த 12ம் தேதி காலை 10.30 மணிக்கு சண்முகர், விக்னேஸ்வரர், நவ வீரர் மற்றும் பரிவாரர்களுடன் மலைக்கோயில்லிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், இரவு படிச்சட்டத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் படிச்சட்டத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இந்தநிலையில், 17ம் தேதி காலை கந்தசஷ்டியின் 6-ம் நாள் திருவிழாவன்று சண்முகருக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெற்றன. மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.