பதிவு செய்த நாள்
18
நவ
2015
10:11
நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் போது,மானிடருக்கு வேர்ப்பது போல் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடைபெற்றது.
நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, அருணகிரிநாதர்,சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற, இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 12 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக,திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக,நேற்று முன்தினம் இரவு, சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சக்திவேல் வாங்குவதற்காக, திருத்தேரில் இருந்து இறங்கி கோவிலுக்குள் ஆக்ரோஷத்துடன் வந்தார்.
ஆக்ரோஷத்துடன்,அன்னையிடம் சக்திவேலைப் பெற்று தமது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று, சிங்காரவேலவரின் திருமேனியெங்கும் வியர்வை அரும்பியது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில்,கலெக்டர் பழனிசாமி,எஸ்.பி.,அபினவ்குமார் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணைப்பிளந்த அரோகரா கோஷத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.