திருப்பரங்குன்றத்தில் காலையில் கார்த்திகை கொடியேற்றம்: மாலையில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2015 10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றமும், மாலையில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் லீலையும் நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சார்யார் வாள் கொண்டு செல்ல, அவர்களைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இறுதியில் சூரனை விரட்டி சென்று சுவாமி சம்ஹாரம் செய்தார்.திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். கோயிலில் ஆறு நாட்களாக தங்கி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், தேரின் வடம் பிடித்து இழுக்க கிரிவீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும்.
அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயிலில் நேற்று நடந்த சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. நேற்று மாலை வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்ட சுவாமி, அன்னை பராசக்தியிடம் வேல் பெற்று, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது.
சோலைமலை முருகன் கோயில்: இன்று காலை 11.25 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு பாவாடை தரிசனம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை முடிந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி பொறுப்பு செல்லதுரை செய்து வருகின்றனர்.