வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த 6 நாட்களாக கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்து வருகிறது. இதற்காக நவ. 12 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகளுடன் பூஜைகள் நடந்தது. சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஆறாம் நாளான நேற்று மகாசஷ்டி வழிபாடு நடந்தது. காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வெள்ளவிநாயகர் கோயிலில் இருந்து சஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் பால்குடம், காவடி எடுத்தபடி ஊர்வலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்தனர். அங்கு சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் நடந்தது. மாலையில் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்து அழித்தார். பக்தர்கள் கைதட்டியும், பூக்களை துõவியும் வழிபட்டனர். பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயில் சென்ற சுவாமிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்