விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கிய கந்த சஷ்டி விழாவில், சுவாமி கோயில் சுற்றி வருதல் , அபிஷேகம், வேல் பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை நேரங்களில் பஜனையும் நடந்து வந்தது. முக்கிய நாளான நேற்று மாலை 5 மணிக்கு வாலசுப்பிரமணியசுவாமியை சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயில் கந்தசஷ்டி விழா நவ., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஆறாம் நாளான நேற்று மகாசஷ்டி வழிபாடு நடந்தது. காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வெள்ளவிநாயகர் கோயிலில் இருந்து சஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் பால்குடம், காவடி எடுத்தபடி ஊர்வலமாக வந்தனர். அங்கு சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்து அழித்தார். பக்தர்கள் கைதட்டி, பூக்களை தூவி வழிபட்டனர். பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயில் சென்ற சுவாமிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.