பதிவு செய்த நாள்
25
நவ
2015
10:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கோவில் நடை சாத்தப்பட்டதுடன், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பொள்ளாச்சி -வால்பாறை ரோட்டில், சண்முகபுரம் அருகே பாலாற்றங்கரையில், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. பாலாற்று நடுவே அமைந்துள்ள கோவிலில், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கோவிலை சூழ்ந்து விடும். இதுபோல, நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் மழை அதிகமாக பெய்ததால், கோவில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.கோவில் முன்பு, பக்தர்கள் செல்லும் நடைபாதை பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், பக்தர்கள் வசதிக்காக போடப்பட்டிருந்த பந்தலும் கீழே சாய்ந்தது. பக்தர்கள் செல்ல தடை: கோவிலை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்ததால், பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் பூஜைகள் செய்ய யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீர் வடிந்த பின், கோவில் வழக்கம் போல செயல்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.