ராசிபுரம்: அலவாய்மலை கோவிலில், கார்த்திகை சோம வார விரதம் துவங்கியது. ராசிபுரம் அடுத்துள்ள, அலவாய்மலையில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரர், சண்முகம், விநாயகர், நவக்கிரக கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், சோமவார விரதம் இருப்பது வழக்கத்தில் உள்ளது. பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் கடைபிடிப்பது போல், கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் நான்கு அல்லது ஐந்து கிழமை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் ஸ்வாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை, கட்டளைதாரர் நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. நாளை, 43ம் ஆண்டு அன்னாபிஷேக விழா நடக்கிறது.