பழநி: பழநியில் கார்த்திகைத் தீபத் திருவிழாவில் குவிந்த பக்தர்கள் இரண்டு மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.,19ல் துவங்கி நவ.,25வரை கோலாகலமாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பவுர்ணமி பெரிய திருக்கார்த்திகையை முன்னிட்டு, அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலைக்கோயிலில் குவியத்தொடங்கினர். திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோயில், நான்குகிரிவீதி கோயில்களிலும் பக்தர்கள் பால்குடங்கள் எடுத்துவந்தும், கார்த்திகை தீபம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு செய்தனர். கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். நீண்டநேரம் காத்திருப்பு: ரோப்கார் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் பக்தர்கள் 2 மணி மணிநேரம் வரை காத்திருந்து, மலைக்கோயிலுக்கு சென்றனர். காலையில் சென்ற பக்தர்கள் மாலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபத்தை காண்பதற்காக, மலையிலேயே தங்கிவிட்டனர். இதனால் மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். பொதுதரிசன வழியில் 3மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.