பதிவு செய்த நாள்
26
நவ
2015
11:11
திருப்பதி:ஆந்திர மாநிலத்தில், ஏழு நதிகளின் சங்கமத்திலிருந்து, சிவன் கோவில் வெளிப்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் அருகில் உள்ள கொத்தபள்ளியில், ஏழு நதிகள் சங்கமமாகின்றன. இந்த இடத்தில், புகழ்பெற்ற சங்கமேஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில், வழக்கமாக, ஆண்டில் எட்டு மாதங்கள், நீரில் மூழ்கிஇருக்கும். சங்கமத்திற்கு நீர்வரத்து குறையும் போது, கோவில் வெளிப்படும்; அப்போது, அங்கு தெரியும் சிவலிங்கத்திற்கு, பக்தர்கள் பூஜைகள் செய்வர். இந்நிலையில், செப்., 20ல், சங்கமம் பகுதியில் தண்ணீர் நிரம்பியதால், கோவில் மறைந்தது. இப்போது, மீண்டும் வெளியே வந்துள்ளது. இரு மாதங்களுக்குள், கோவில் வெளியே தெரிந்தது, அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இது போன்று, 35 ஆண்டுகளுக்கு முன் தான் நடைபெற்றதாக, கோவில் அர்ச்சகர் ரகுராம சர்மா தெரிவித்தார். கார்த்திகை மாதத்தில், சிவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம், இந்தாண்டு கிடைத்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.