பதிவு செய்த நாள்
26
நவ
2015
12:11
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கார்த்திகை தீப விழாவையொட்டி கோயில்களில் விளக்குகள், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திருவணணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நேரத்தில், திண்டுக்கல்லில் உள்ள கோட்டைமாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் ஆஞ்சநேயர் உட்பட பல கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். வீடுகளிலும், வீட்டு வாசல்களிலும் குத்துவிளக்கு, தீபம் ஏற்றி, பூ, பழம் வைத்து பெண்கள் வழி பட்டனர். பல கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பல இடங்களில் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டது. தாண்டிக்குடி:தாண்டிக்குடி மற்றும் பண்ணைக்காடு பகுதியில் கார்த்திகை பெரு விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை, பஜன் நடந்தது. தொடர்ந்து சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கானல்காடு பூதநாச்சியம்மன், பண்ணைக்காடு மயான காளியம்மன், முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாட்டுடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலைப்பகுதியை சேர்ந்த திராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்களது வீடுகளில் வண்ணமயமான கோலங்களிட்டு விளக்கு ஏற்றினர். கன்னிவாடி: திருக்கார்த்திகையை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகம், மலர் அலங்காரத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.