பதிவு செய்த நாள்
01
ஆக
2011 
11:08
 
 ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு, ஆக., 3ல் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆடித்திருவிழாவின் 11ம் நாளான ஆக., 3ல் ஆடித்தபசை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதிகாலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும். காலை 6 மணிக்கு பர்வதவர்த்தனி அம்பாள், கமல வாகனத்தில் ராமதீர்த்தம் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளளும், பகல் 11 மணிக்கு ராமநாதசுவாமி, தங்கரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளளும், பிற்பகல் 3 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெறும். இதையொட்டி, காலை 6 மணிக்கு அம்பாள் புறப்பாடு நடைபெற்ற பின், கோவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து பூஜை வைபவங்கள் நடைபெறும், என கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.