பதிவு செய்த நாள்
01
ஆக
2011
05:08
ரமலான் நோன்பு குறித்து, அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ரமலான் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள் (வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால்) எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள். ரமலான் மாதம் வந்து விட்டால் வானங்களின் (ரஹ்மத்தின்) கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான் எனப்படும் வாசலாகும். அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் அதன் இரவுகளில் நின்று வணங்குகிறாரோ இன்னும் லைலத்துல் கத்ர் இரவிலும் நின்று வணங்குகிறாரோ, அவருடைய முன் செய்த (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் நோன்புஎனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால் எனக்காகவும், என் திருப்திக்காகவும், பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கி இருந்தான். மேலும், நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது. நோன்பு திறக்கும் போதும் தன் இறைவனை சந்திக்கும்போதும். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடனே இருக்கும். ஷாபான் மாதம் பிறை 15ஆம் இரவும், நோன்புப் பெருநாள் இரவும், ஹஜ்ஜு மாதம் 8,9,10 ஆகிய ஐந்து இரவுகளில், யார் விழித்திருந்து வணக்கம் புரிகிறாரோ, அவருக்கு சொர்க்கம் கடமையாக்கப்பட்டு விட்டது. மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே, பித்ரா என்னும் தருமத்தை கொடுத்துவிட வேண்டும். ஒரு அடியானின் நோன்பு பித்ரா தருமம் செலுத்தாதவரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா(தருமம்) கொடுத்த பின்புதான் நோன்பு வானகம் செல்கிறது. நோன்பின் மாண்பைப் புரிந்து கொண்டு, மனம் மகிழ நோன்பைத் துவக்குவோமே!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை: 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை: 4.29 மணி.